கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ குட்கா பறிமுதல்..!

கோவை ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.1-வது பிளாட்பாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயில் கோவை வந்தது. உடனே போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். ரெயில் பெட்டியில் கழிவறை அருகே ஒரு வெள்ளை மூட்டை இருந்தது. போலீசார் அந்த மூட்டை குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் ரெயிலில் இருந்த பயணிகள் அது யாருடையது என தெரியவில்லை என்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர். அதில் 9 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குட்காவை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.