முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்:1.25 லட்சம் கோடி முதலீடு- 60 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து..!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ‘ முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் அவ்வபோது, முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது.

இதற்கிடையில், தமிழக முதல்வர் துபாய், அபுதாபி சென்று அங்கேயும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார். திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை ரூ.94,925 கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இதன் மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, முதலீட்டாளர்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.புதிய ஒப்பந்தம் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் கிடைக்கவுள்ளது மேலும் 74 ஆயிரத்து 898 பேருக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 21 புதிய தொழில்திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதவிர, 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் செய்தார்.