ஆசிரியை திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.!!

செம்பட்டி அருகே ஆத்தூரைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு மாணவி பள்ளி ஆசிரியை திட்டியதாக கூறி, விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் 10-வது தெருவைச்  சேர்ந்தவர் காளிமுத்து (43) மினி லாரி ஓட்டுனரான இவரது மகள் ஷர்மிளா (15) கொடைரோடு அடுத்த,  காமலாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவரது பள்ளியில் வகுப்பு ஆசிரியை ஒருவர் சர்மிளாவை தினமும் அடித்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த சர்மிளா இன்று சனிக்கிழமை பள்ளிச் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. தன்னை மட்டும் வகுப்பு ஆசிரியை அடிப்பதாக பெற்றோரிடம் கூறிய சர்மிளா இன்று  காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மயங்கி நிலையில் இருந்த, மகளை பெற்றோர்கள் தீவிர சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.