கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை: உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் செயற்குழு கூட்டம்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 23 ந்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தர உள்ளார். இரவு கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கும் முதல்வர், 24 ந்தேதி காலையில் ஈச்சனாரி இரத்தினமர கல்லூரி அருகே நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதையடுத்து, மாலையில், பொள்ளாச்சியில் நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில், மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இணைய உள்ளனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் 26 ந்தேதி கோவை வந்து, கோவையில் பிஎஸ்ஜி பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள முதல்வர், அன்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

இந்நிலையில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகை தரும் தமிழக முதல்வருக்கு, வழி நெடுங்கிலும் சிறப்பான உற்சான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில், கோவை விமான நிலையம் முதல், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் வரை தமிழக முதல்வர் செல்லும் பாதை முழுவதும், தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட வாரியாக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், முன்னாள் எம்பி நாகராஜ் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.