டெல்லியில் ஏப்ரல் 2 ம் தேதி அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு தி.மு.க. எம்.பி.க்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட், மேகதாது அணை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளார். மேலும், டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களை சந்தித்தும், திமுக அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கற்க அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார்.