நடிகர் அஜித் தந்தை மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்..

சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு.அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் இரங்கல்: சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “நடிகர் அஜித் தந்தை சுப்பிரமணியம் மறைவு செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தந்தையை இழந்துவாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று ட்வீட் செய்துள்ளார்.

அண்ணாமலை இரங்கல்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று (மார்ச் 24) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்த பி.சுப்பிரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.