செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா:சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்-போலீசார் குவிப்பு ..!!

சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்கான துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை துவக்க விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ். கடற்படை வளாகம் வரும் பிரதமர் மோடி அதன்பிறகு செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்கிறார். இதையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: 44வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 28.07.2022(இன்று) மாலை நடைபெறுகிறது. பிரதமர், தமிழ்நாடு ஆளுநர், முதல்-அமைச்சர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள்.

எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.

அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையம் வரவேண்டிய மக்கள் பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.