மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸிலிருந்து நாளை விழித்தெழும் சந்திரயான் 3 – இஸ்ரோவின் சுவாரசிய தகவல்.!!

சென்னை: நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை (செப் .22) சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் இன்றே தொடங்க உள்ளன.

சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும். இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருந்த நிலையில் அதுவும் தூக்க நிலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றுவிட்டது. 14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில்தான் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தற்போது இரண்டையும் தூக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன் அவை தூக்க நிலைக்கு சென்றதால், நாளை விழித்தெழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் மீண்டும் வெற்றிகரமாக கண் விழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரயான் 3ன் நிலை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

சந்திரயான்-3 இன் லேண்டர், விக்ரம், அல்லது அதன் ரோவர், பிரக்யான் இரண்டுமே நிலவு பயணங்களுக்கான பொதுவான ஹீட்டர்கள் கொண்டு இருக்கவில்லை. அதாவது நடுங்கும் இந்த குளிரை தாக்கு பிடிக்க எந்த வசதியும் இரண்டிலும் செய்யப்படவில்லை. பொதுவாக ரேடியோஐசோடோப் ஹீட்டர் யூனிட்கள்  எனப்படும் ஹீட்டர்கள், லேண்டர், ரோவர்களை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க, இது போன்ற கருவிகள் அவசியம்.

ஆனால் அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாமல், சந்திரயான் -3 இன் வாழ்க்கை என்பது சந்தேகம்தான். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமேதான் நிலவில் சந்திரயான் 3 தாக்கு பிடிக்கும். இதனால் தற்போது நிலவில் நிமிடங்கள் திக் திக் என்று நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

மீண்டும் சோதனை: சமீபத்தில்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்தது. இந்த சோதனைக்கு பின் முக்கியமான காரணம் உள்ளது.

அதாவது விக்ரம் லேண்டர் இருந்த இடத்தில் இருந்து பறந்த மேலே சென்று அதன்பின் மீண்டும் வேறு இடத்தில் தரையிறங்கி உள்ளது. இஸ்ரோ கட்டளையின் பேரில், அது இயந்திரங்களைச் ஆன் செய்து பறந்து உள்ளது. எதிர்பார்த்தபடி விக்ரம் சுமார் 40 செமீ மேலே பறந்து, 30 – 40 செமீ தொலைவில் நகர்ந்து பாதுகாப்பாக வேறு இடத்தில் தரையிறங்கியது.

அப்போது அதில் இருந்த பாகங்கள் எல்லாம் உள்ளே சென்றுவிட்டு அதன்பின் மீண்டும் வெளியே கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிலவில் மனிதர்களை இறக்கும் வித்தையை இந்தியா செய்ய முடியும். அங்கேயே பறந்து இங்கும் அங்கும் செல்லும் வித்தையை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்ப பின்னர் மீண்டும் திரஸ்டர்கள் உதவியுடன் பூமிக்கு திரும்ப இது பெரிய உதவியாக இருக்கும்.

பல்வேறு கண்டுபிடிப்புகள்: விக்ரம் லேண்டரில் இருந்து சாஸ்ட் எனப்படும் கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

கனிமங்கள்: இன்னொரு பக்கம் விக்ரம் லேண்டரின் லேசர் மூலம் இயங்கும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப், நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மேற்பரப்பில் கந்தகம் அதாவது சல்பர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

அங்கே “முதற்கட்ட பகுப்பாய்வு, மூலம், சந்திர மேற்பரப்பில் அலுமினியம் , சல்பர் , கால்சியம், இரும்பு , குரோமியம்  மற்றும் டைட்டானியம் ஆகியவற்றின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . மேலும் அளவீடுகள் செய்ததில் மாங்கனீசு , சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன்  இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஹைட்ரஜன் இருப்பு குறித்து முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது” என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குழப்பம்: இந்த நிலையில்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் “இயற்கையான சம்பவம்” ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று நிலவில் விக்ரம் லேண்டரில் இருக்கும் Lunar Seismic Activity (ILSA) எனப்படும் நிலநடுக்க ஆய்வு கருவி நிலவில் நிலநடுக்கத்தை பதிவு செய்தது.

அதே சமயம் 26ம் தேதி நிலவில் இந்த கருவி “இயற்கையான சம்பவம்” ஒன்றை பதிவு செய்துள்ளது. அதாவது இதை இஸ்ரோ இயற்கையான நிகழ்வு என்று மட்டுமே கூறி உள்ளது. ஆனால் இது என்ன நிகழ்வு.. நிலநடுக்கமா? வேறு எதுவுமே என்று கூறவில்லை. இதை பற்றி சந்திரயான் 3 ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது என்ன நிகழ்வு என்பது தொடர்பான விவரங்கள் மர்மாகவே இருக்கிறது.