நிலவில் தரையிறங்கும் பகுதியை உறுதி செய்த சந்திரயான் 3.!!

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது.

பின் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 9, 14 மற்றும் 16 ஆம் தேதி என படிப்படியாக தூரத்தை குறைத்து புரபல்சன் பகுதியில் இருக்கும் விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி விக்ரம் லேண்டர் எடுத்த நிலவின் புகைப்படத்தை இரண்டாவது முறையாக இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

அதன் பின் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. நேற்று மதியம் இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது விக்ரம் லேண்டர் அதிகபட்சமாக 134 கிலோ மீட்டரும் குறைந்தபட்சம் 35 கிமீ தொலைவிலும் உள்ளது. இப்படி படிப்படியாக லேண்டரின் தூரம் குறைக்கப்பட்ட நிலையில் நாளை மறுதினம் நிலவில் தரையிறங்க உள்ளது.

இப்படி இருக்கும் சூழலில் இஸ்ரோ தற்போது லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் வேறு சில புகைப்படங்களும் தற்போது பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் Lander Hazard Detection and Avoidance Camera மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் காணும் இடத்தில்தான் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் சந்திரயான் 3 விண்கலம் நாளை மறுதினம் மாலை 6 மணி 4 நிமிடங்களில் நிலவில் தரையிறங்கும்.

நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை படிப்படியாக குறைத்து, குறைந்தபட்ச தூரத்தை எட்டிய பின், லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் நான்கு குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும். அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து சிறிய சாய்தளம் வெளியே வரும். பின் விக்ரம் லேண்டரில் இருக்கும் பிரக்யான் எனும் ரோவர் சாய்தளத்தை பயன்படுத்தி வெளியே வரும்.

ரோவர் தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவதுதான் சந்திரயானின் இறுதி கட்டமாகும்.