அதிகரிக்கும் கொரோனா… 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்..!

டெல்லி: கொரோனா பரவலை அடுத்து 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய  அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், மராட்டிய அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மாறும் கர்நாடகா மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு மாநில முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் மார்ச் 8-ம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 2,882-ஆக இருந்த நிலையில், மார்ச் 15-ம் தேதி முடிவில் 3,264-ஆக அதிகரித்துள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் மார்ச் 8-ம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 170-ஆக இருந்த நிலையில், மார்ச் 15-ம் தேதி முடிவில் 258-ஆக அதிகரித்துள்ளது. தொற்று விகிதம் 1.99%-ஆக உள்ளது. இந்தியா முழுவதும் சராசரி தொற்று விகிதம் 0.64-ஆக உள்ளது.

மாநில அரசு இதனை மாவட்ட வாரியாக தொடர்ந்து கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும் கொரோனா அதிகரிக்காமல் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகள், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.