கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்

கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்  

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி (50) திருகுமரன் நகர் பகுதியில் தனது இருமகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் வேலைக்கு புறப்படுவதற்காக வீட்டுக்கு உள்ளே இருந்து வெளியே வருவதற்கு கதவை திறந்து உள்ளார். அப்போது கதவுக்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டு இருப்பதை பார்த்த செல்வி எதற்கு நிற்கிறாய் என்று கேட்ட போது அந்த நபர் வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்க்கச் சொன்னதாக கூறியுள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த செல்வி கதவை மூட சென்ற போது அந்த நபர் செல்வியின் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து செல்வி கீழே தள்ளி விட்டு தப்பித்து ஓடினார். இதனையடுத்து பதறிக் கொண்டு வீட்டை வெளியே வந்த செல்வி பார்க்கும் போது தன்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த நபர் வெளியே காத்திருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததும் ஒருவர் வெளியே காத்திருந்து நோட்டமிடுவதும் மற்றொரு நபர் வீட்டிற்குள் புகுந்து செல்வியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தயார் நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது வாகனத்தில் தயாராக இருந்த நபர் வாகனத்தை வேகமாக இயக்க தங்க சங்கிலியை பறித்தவர் விழுந்து அடித்து மீண்டும் வாகனத்தில் ஏறி தப்பி செல்வதும் தெரியவந்தது. வீட்டில் செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி இருவரும் இந்த சங்கிலி பறிப்பை அரங்கேற்றியுள்ளனர். மேலும் இச்சமபவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு சங்கிலி பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பட்டபகலில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணிடம் சங்கிலி பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.