பண்ணாரி அருகே கார்கள் மோதி விபத்து: கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் பரிதாப பலி- 5 பேர் காயம்..

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் மைசூர்  மாவட்டம் பன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்  சித்துராஜ்(35). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக காரில் நேற்று முன்தினம் இரவு பண்ணாரி – பவானிசாகர்  சாலையில் ராஜன்நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு சித்துராஜ் மற்றும் தன்னுடன் வந்த ரவிக்குமார், வினோத் குமார் ஆகியோர் கீழே இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் கார் ஏறுவதற்காக சாலையை கடந்தபோது பண்ணாரியில் இருந்து பவானிசாகர் நோக்கி அதிவேகமாக வந்த  கார் சாலையை கடந்து சென்ற இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் தாறுமாறாக சென்று எதிரே பவானிசாகரில் இருந்து பண்ணாரி நோக்கி வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் சித்துராஜுக்கு தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. சித்துராஜ் உடன் வந்த ரவிக்குமார் மற்றும் வினோத்குமார் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (38), அதே காரில் வந்த ஜெகநாதன், ராஜேஷ் (எ) சந்திரதீப்  ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் பட்ட அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சித்துராஜ் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இருவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.