தாளவாடியில் ஆம்னி காரில் கர்நாடக மதுபானம் கடத்தல் – 480 பாக்கெட்டுகள் பறிமுதல்..!

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு தாளவாடி மலைப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்துள்ள சிமிட்டஹள்ளி நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி நோக்கி வந்த ஆம்னி காரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவானார்.
இதையடுத்து போலீசார் ஆம்னி காரை சோதனையிட்ட போது காரில் இருந்த அட்டைப் பெட்டிகளில் 180 மி.லி. அளவுள்ள 480 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் காரில் மதுபானம் கடத்திய நபர் சிமிட்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த சிவமல்லு (42) என்பதும் தெரிய வந்தது. தப்பியோடி தலைமறைவான சிவ மல்லுவை தாளவாடி போலீசார் தேடி வருகின்றனர்.