யானை தாக்கி செங்கல் சூளை தொழிலாளி படுகாயம்..

தர்மபுரியைச் சேர்ந்த ஈஸ்வரன் – விமலா தம்பதியினர். கோவை, தடாகம் பகுதி அருகே உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்வரன் செங்கல் சூளையில் மண் கலக்கி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அதில் ஆண் காட்டு  யானை ஈஸ்வரனை தாக்கியது. உடனே அருகில் இருந்த சக தொழிலாளிகள் சத்தம் போட்டு யானைகளை துரத்தினர். இதில் ஈஸ்வரனுக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஈஸ்வரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறும்போது:-

அடிக்கடி யானைகள் அப்பகுதிகளுக்கு வருவதாகவும், எனவே அதனை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் மலை பகுதி ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அமைத்து உள்ள அகழிகள் சரி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு யானைகள் வருவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.