பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவி காலம் 2024-வரை நீட்டிப்பு- அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன.

இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கி விட்டது. இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற வீதியில் உள்ள டெல்லி மாநாகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில் ஜனவரி 16, 17-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, பா.ஜ.க.வின் செயற்குழு கூட்டம் 2-வது நாளாக நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் வரும் 2024- ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதவி நீட்டிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது டுவிட்டரில், “நாம் அனைவரும் ஒன்றிணைந்து லோக்சபா தேர்தலில் மோடி தலைமையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும். ஏழை நலன் என்பதே எங்கள் தீர்மானம். ஜெய் ஹிந்த், ஜெய் பிஜேபி” என்று ஜே.பி.நட்டா பதிவிட்டுள்ளார்.