தமிழகம் வருகிறார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…அதிமுகவை இணைக்க முயற்சி?

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார்’, என அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பா.ஜ.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகை மதுவந்தி உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்துக்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பாய் என்றார்.

அவர் பாதையில் இன்று நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறினார். ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர் வாஜ்பாய் என்று குறிப்பிட்ட அவர், எதிரிகளே இல்லாதவர் வாஜ்பாய் என்றார். இலவச கல்வி உள்ளிட்ட மக்களுக்கான பல திட்டங்களை தொடங்கியவர் வாஜ்பாய் என்று புகழாரம் சூட்டினார்.

தமிழகத்திலோ நடந்து வரும் தி.மு.க. ஆட்சி, குடும்பத்துக்காக குடும்பத்தால் நடத்தப்படும் ஆட்சியாக இருக்கிறது என்று சாடினார். கடந்த முறை ஊழலால் தரமற்ற பொங்கல் பொருட்களை இந்த ஆட்சி மக்களுக்கு வழங்கியது என்று குற்றம்சாட்டிய அவர், இந்த முறை கரும்பு கூட இல்லாத பொங்கல் பரிசை வழங்க முடிவு செய்திருக்கிறது என்றார்.

முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவின் வாகனம் மீது தாக்குதல் நடந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். உரிய நேரத்தில் உரிய முறையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

அ.தி.மு.க.வில் என்ன பிரச்சினை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள் என்று கூறிய அவர், கட்சியை வலுப்படுத்தும் வகையில் நாளை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருவதாக கூறினார். குறிப்பாக நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்றார்.