மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. வியூகத்தை பாஜக கையில் எடுத்துள்ளது – ராகுல் குற்றச்சாட்டு.!

புதுடெல்லி: மக்களின் கவனத்தை திசைதிருப்பி தேர்தலில் வெற்றிபெறும் வியூகத்தை பாஜக கடைபிடித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள வீடியோவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: கர்நாடகாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தேர்தல்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பி வெற்றி பெறும் வியூகத்தை பாஜக தொடர்ச்சியாக கடைபிடித்து வருவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. மக்களை சுயமாக சிந்திக்க விடாமல் பாஜக இந்த கொள்கையை தந்திரமாக கையாண்டு வருகிறது.

அடுத்தடுத்து நடைபெறவுள்ள தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றிபெறும். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இண்டியா கூட்டணியின் வெற்றி அமையும்.

மக்கள் அனைவரும் விரும்பும் அடிப்படை விஷயமான ஜாதிவாரி கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது கூட பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிதூரி, நிஷிகாந்த் துபே ஆகியோர் வேறு பிரச்சினைகளை கிளப்பி கவனத்தை சிதறடிக்கும் வேலையில் ஈடுபட்டதை நாடே அறியும்.

முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்ற கவனத்துக்கு கொண்டு வரும்போதெல்லாம் பாஜக இதே வியூகத்தைத்தான் பின்பற்றி வருகிறது. தற்போது அதனை எவ்வாறு கையாள்வது என்பதை நாங்கள் கற்றுக் கொண்டுவிட்டோம். அதற்கான பாடத்தை கர்நாடக தேர்தல் எங்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற யோசனையும் மக்களை உண்மையான பிரச்சினைகளில் திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டதுதான்.

ஊடகங்களை பாஜக கட்டுப்படுத்தி வருவதால், அவர்களுக்கு சாதகமான விஷயங்கள் மட்டும் மக்களை நம்பவைக்கும் வகையில் வெளியிடப்படுகின்றன.

விலைவாசி உயர்வு, பட்டியல் இன, ஓபிசி மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு எதிரான பெரும் அநீதி, வேலையின்மை, செல்வப் பகிர்வில் சமத்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இவற்றை திசைதிருப்பும் வேலைகளில்தான் பாஜக தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் பெயரை மாற்றுவோம், ஒன்றாகதேர்தல் நடத்துவோம் என்று கூறுவதெல்லாம் அப்பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகத்தான்.

ஊடக தாக்குதலை மீறி எதிர்க்கட்சிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை பாதுகாக்கவே மக்களுக்காக இண்டியா கூட்டணியை அமைத்து போராடி வருகிறோம். இவ்வாறு ராகுல் கூறினார்.