10000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பூதப்பாண்டி செயல் அலுவலர் அதிரடி கைது.!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் 10000/- ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

இது பற்றிய கூடுதல் தகவல் வருமாறு…
பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சுந்தரம் வயது 67 என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள பூர்வீக சொத்தில் உள்ள வீட்டின் உரிமையை தனது பெயருக்கு மாற்ற கோரி கடந்த ஜனவரி மூன்றாம் தேதி விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அவரது விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு வைத்து உள்ளார். இந்நிலையில் சுந்தரம் நேற்று பூதப்பாண்டி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து விவரம் கேட்டபோது ரூபாய் 10 ஆயிரம் தந்தால் மட்டுமே வீட்டின் உரிமையை பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கறாராக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்களிடம் புகார் கொடுத்து உள்ளார். இந்நிலையில் மேற்படி சுந்தரம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் இன்று மாலை ரூபாய் பத்தாயிரம் லஞ்சப்பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் லஞ்சம் வாங்கும் போது அவரை கையும் களவுமாக பாய்ந்து சென்று பிடித்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பின்னர் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தின் வீடு ஆரல் வாய்மொழி பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கும் சோதனை முடிவற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு பிரிவு வட்டாரத்தில் கூறப்படுகிறது. பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று பேரூராட்சி செயல் அலுவலர் லஞ்சம் வாங்கும்போது கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..