மது குடிக்க பணம் தராததால்… தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..!

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 65) தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவரது மகன் குமாரவேல் (வயது 36) குடிப்பழக்கம் உடையவர்.எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தந்தை கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். இந்த நிலையில் 3 -9-2019 அன்று குமரவேல் தனது தந்தையிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். கிருஷ்ணன் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த குமாரவேல் கிருஷ்ணனை கீழே தள்ளி உருட்டு கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரவேலை கைது செய்தனர். இது குறித்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா தந்தையை கொலை செய்த மகன் குமாரவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.