கோவை இன்ஜினீயர் அடகு வைத்த நகை மோசடி- தனியார் நிதி நிறுவன காசாளர் கைது..!

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). என்ஜினீயர். இவருக்கு பணத் தேவை ஏற்பட்டது. அதனால் தங்க நகையை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார். அதன் பின்னர் மாதமாதம் பணத்திற்கு வட்டியை செலுத்தினார். இந்த நிலையில் நேற்று பணத்தை திருப்பி செலுத்தி நகையை மீட்க அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது அந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் நிதி நிறுவன காசாளருக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பல முறை அழைத்தும் அவர் போனை எடுக்காததால் பிரான்சிசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அந்த நிதி நிறுவனத்தை குறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் விசாரித்தார். அப்போது அவர்கள் அந்த நிதி நிறுவனத்தினர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் நகையை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிதி நிறுவன காசாளர் நல்லாம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.