கணவர் அதிக கடன் வாங்கியதால் மனைவி தூக்குபோட்டு தற்கொலை..

கோவை சூலூர் பல்லப்பாளையம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா (வயது 34). இவர்களுக்க கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் அவரது நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அதனை அவர் சரியாக திருப்பி தரமால் இருந்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் ஹேமலதாவிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது ஹேமலதா அவரிடம் எதற்காக குடித்து வந்தீர்கள் , குடித்தால் எப்படி கடனை அடைக்க முடியும் என கேட்டுள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை நினைத்து ஹேமலதா மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு கொண்டார்.

அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஹேமலதா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஹேமலதாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.