வேங்கைவயல் விவகாரம் : மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஏற்கெனவே அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 25 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதன் மூலம் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.