ஆஸ்திரேலியா, இந்தியா வர்த்தகம் இரண்டு மடங்கு அதிகரிக்கும்..!

ந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மாற்றத்திற்கான ஒப்பந்தமாகும்.

இது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பாநீஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அமைப்பின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

பெரும் அளவிலான ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் இந்தியாவிற்கு வந்திருப்பதையும், அதே போல், முக்கியமான இந்திய வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றிருப்பதையும் அவர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிகவும் முக்கியமான உயர்நிலை தூதுக்குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார். இரு நாடுகளும் தங்களுக்கு இடையே பரஸ்பர பரிமாற்றங்களைக் கொண்டிருப்பது குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான பரஸ்பர நட்புறவையும் பொருளாதார ஒத்துழைப்பையும் அதிகப்படுத்துவதற்கு திருப்புமுனையான தருணம் இது என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  டான் ஃபேரல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பியூஷ் கோயல், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை பலமடங்கு அதிகரிக்க மாபெரும் வாய்ப்பு இருப்பதாகவும் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக்கும் தற்போதைய இலக்கை நிறைவேற்ற தொழில்நிறுவனங்களும் இங்குள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.