பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி- கணவர் கைது..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள பிளிச்சி, பெட்டதாபுரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 54 ) கூலி தொழிலாளி .இவரது மனைவி செல்வி ( வயது 38) இவர்களுக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அய்யாசாமி குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரிந்து தனியாக சென்று விட்டார்.இந்த நிலையில் செல்வி நேற்று முன்தினம் தனது மகனுடன் அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்தார். அங்கு குடிபோதையில் உட்கார்ந்து இருந்த அய்யாசாமி செல்வியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார் .அவர் மறுத்ததால் அவர் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி எரித்து கொல்ல முயன்றார். அங்கிருந்தவர்கள் அதை தடுத்து விட்டார்கள் . இது குறித்து செல்வி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவர் அய்யா சாமி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்கொலை மிரட்டல் வரதட்சணை கொடுமை உட்பட 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.