அண்ணா பிறந்தநாள்… 12 கைதிகள் முன் விடுதலை..!

சென்னை: அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்த 5 முஸ்லிம் கைதிகள் உட்பட 12 பேரை முன்விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட பலரை அண்ணா பிறந்த தினம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு நிகழ்வாக முன்விடுதலை செய்வது குறித்த பல கோப்புகளை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், இந்த கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார்.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கில் நீதிபதிகள், நிலுவையில் உள்ள மசோதாக்கள், கோப்புகள் குறித்து ஆளுநரும், முதல்வரும் ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தது. இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், 5 முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட 12 பேரை முன்விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து முன்விடுதலை தொடர்பாக தமிழக உள்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, கடலூர் சிறையில் உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் என்ற உக்கிரவேல் ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

கோவை சிறையில் உள்ள அபுதாகிர் என்ற அபு, விஸ்வநாதன் என்ற விஜயன், கமல் என்ற பூரிக்கமல், ஹாரூண் பாஷா என்ற ஹாரூண், சாகுல்ஹமீது, பாபு என்ற உமைல் பாபு ஆகிய 6 பேரும், வேலூர் மத்திய சிறையில் இருந்த சீனிவாசன், சென்னை புழல் மத்திய சிறை 1-ல் இருந்த ஜாஹிர் என்ற குண்டு ஜாஹிர் ஆகியோரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.