கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!

கோவை பட்டணம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 55). இவர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்திருந்தார். அவர் மனு அளிப்பதற்காக வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென சண்முகசுந்தரம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மயங்கி விழுந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். வரிசையில் நின்றிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.