இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் இரவோடு இரவாக திடீர் ராஜினாமா!!

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இந்நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்ச தனது அமைச்சர பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பான அவர் ட்விட்டர் பதிவில், அனைத்து இலாகாக்களில் இருந்தும் பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வரும்பட்சத்தில் நாட்டில் பழையபடி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உதவக்கூடும் என்று நம்புகிறேன்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்கள், எனது கட்சி மற்றும் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எப்போதும் நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

நமல் ராஜபக்ச மட்டுமன்றி, இலங்கையில் பிற அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை அறிவித்து வருகின்றனர். இதை அந்நாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ள நிலையில் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால் புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என தெரிகிறது.