மீண்டும் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைவு – பாஜகவின் மேலிடத்தை சந்தித்த முக்கிய புள்ளி..!

திமுகவின் பரம எதிரி என்று சொல்லப்படும் திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.

அதனை நிரூபிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி., தமிழக முதல்வரையும், திமுக அரசையும் புகழ்ந்து பேசியது அமைந்தது.

மேலும், சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ் நடவடிக்கை இருப்பதாக கூறி, அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கையோடு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.

இதனை அடுத்து நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் ஒற்றை தலைமையாக, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி செய்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு, வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று, பாஜகவின் தலைமை விரும்புவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் வெளியான தகவலின் படி, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஒருவர் மத்திய அமைச்சர்களை சந்தித்து உள்ளார். அவரிடம் ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் கேட்டறிந்ததாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், ஓ பன்னீர்செல்வமும், எடப்பாடி கே பழனிசாமியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று, அந்த மத்திய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரிடம் வலியுறுத்தியதாக வெளியான தகவல் தெரிவிக்கின்றது.

ஏற்கனவே அதிமுகவில் நடக்கும் குழப்பங்கள் அனைத்திற்கும் பாஜக தான் காரணம் என்று பேசப்படும் நிலையில், தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.