கோவை கார் விற்பனை மையத்தில் காசோலை திருடி ரூ.43 லட்சம் மோசடி செய்த கணக்காளர்-உடந்தையாக இருந்த 3 பேர் கைது..!!!!

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனிஷ்பிரசன்னா (வயது 27)
இவர் ராமநாதபுரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில்
கூறியிருப்பதாவது:-
நான் கோவை திருச்சி ரோட்டில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறேன். தனது நிறுவனத்தில் சரவணன் என்பவர் மேலாளராக
பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மேலாளர் சரவணன் தங்களது நிறுவன கணக்குகளை சரிபார்த்தார்.
அப்போது நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.42,98,100
எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையத்து, எங்களது நிறுவனம் வரவு
செலவு வைத்துள்ள வங்கியில் விசாரித்தபோது வங்கி மூலம் பணப்பரிவர்த்தனை
செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் வங்கியில் எங்களது
காசோலையையும் காண்பித்தனர். அதில் காசோலையை கொண்டு வந்து வங்கியில் செலுத்தியது எங்களது நிறுவனத்தில் வேலை செய்து வந்த கணக்காளர் சேலத்தைச் சேர்ந்த வெங்கடசுப்ரமணியன் என்பதும் தெரியவந்தது. அவர் நிறுவனத்தின் காசோலையத் திருடி போலியாக கையெழுத்து போட்டு திருவண்ணாமலையில் உள்ள நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.42,98,100 மாற்றி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்தவர்களை தேடி திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இடங்களுக்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மோசடிக்கு துணைபோன ஆரணியை சேர்ந்த சிவா, புதுச்சேரியை சேர்ந்த கார்த்திக், தினேஷ்பாபு ஆகியோரை 24 மணிநேரத்தில் கைது செய்தனர். அவர்கள் மோசடி செய்த ரூ.42,98,100-யை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.