சூலூரில் ஆட்டை காப்பாற்ற சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து பலி..!

கோவை சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் கன்னடாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

சம்பவத்தன்று கவிதா தனது தாயாருடன் அருகில் உள்ள தோட்டத்துக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது ஒரு ஆடு மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றது. அந்த ஆடு அங்கிருந்த கிணறு அருகே சென்றது. இதனை பார்த்த கவிதா ஆடு கிணற்றில் தவறி விழாமல் இருக்க ஓடி சென்று ஆட்டை பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கவிதா தவறி கிணற்றில் விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கவிதா தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து கிணற்றில் குதித்து அவரை மீட்டனர்.

பின்னர் அவரை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.