வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது..!

கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேம்பார் பட்டியை சேர்ந்தவர் வடிவேல் ( வயது 26) இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கியிருந்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். கஞ்சா செடி நன்கு வளர்ந்து கஞ்சா மணம் வீசி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெகமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வடிவேல் வசித்து வந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது .இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.