திருச்சி நியாய விலை கடையில் மது குடித்து பெண்களிடம் கலாட்டா செய்த கடை ஊழியர்.!!

திருச்சியில் பணி நேரத்தில் மது அருந்தியபடி நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண்களை அவதூறாக பேசியதாக ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவர் தவச்செல்வனுடன் நேற்று மாலை 5 மணி அளவில் ரேசன் பொருட்களை வாங்குவதற்காக அந்த கடைக்கு சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த நிசாரிடம் அரிசி போடுமாறு சசிகலா கேட்டுள்ளார்.
அதற்கு, ‘100 கிலோ அரிசி மூட்டையை எலி தின்றுவிட்டது’ என நிசார் அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது. மேலும் ரேசன் கார்டை சசிகலாவின் மீது தூக்கி வீசியதோடு, அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா அவரை உற்று நோக்கிய போது, நிசார் மது போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அதனை அருந்தியப்படியே அவர் பணியில் இருந்தும் தெரியவந்தது.
கடையில் நிசார் வைத்திருந்த மது பாட்டில்
இது குறித்து கேட்டபோது அவர் மீண்டும் சசிகலா மற்றும் அவரது கணவர் தவச்செல்வனை அவதூறாக பேசி உள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்திருந்த சசிகலா, இந்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் இதனை அதிகாரிகளுக்கும் பகிர்ந்துள்ள அவர் மது அருந்தியபடி பெண்களை இழிவாக பேசும் நியாய விலைக் கடை ஊழியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதில் அரசு உடனடியாக தலையிட்டு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகிறார்கள்