பரோலில் வந்த பிரபல ரவுடிக்கு திருச்சியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு – பொதுமக்கள் குமுறல்.!!

மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திருவிக நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி ( 37). சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகள் உள்ளதாகவும், மேலும் இவரது கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காளிக்கு, 15 நாட்கள் பரோல் கிடைத்தது. இனைத் தொடர்ந்து அவர் திருச்சி மாவட்ட போலீஸ் எல்லையில் குண்டூர் பர்மா காலணியில் உள்ள அவரது சகோதரி சத்யஜோதி வீட்டுக்கு 15 நாட்கள் தங்கிச் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 25 ந் தேதி வெள்ளைக்காளியின் வருகையை முன்னிட்டு அவரது சகோதரி சத்யஜோதி வீட்டுக்கு முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டு சுபநிகழ்ச்சியாய் வரவேற்கப்பட்டார். மேலும் அவரது வருகையால் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அங்கே ஒன்று கூடியிருப்பதால் அந்த வீடே விசேஷம் நடக்கும் வீடு போல களைக்கட்டி உள்ளது. முன்னதாக, அவரது உயிருக்கு மிரட்டல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ள நிலையில் உஷாரான திருச்சி மாவட்ட போலீசார் அவர் தங்கியுள்ள இடத்தின் நாற்புறத்திலும் துப்பாக்கிகளுடன் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளும் போலீசாருடன் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 25 போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் 15 நாட்களும் ஈடுபடுவது
திருச்சியிலிருந்து மீண்டும் வேலூர் சிறைச்சாலைக்குச் செல்லும்வரை வெள்ளைக்காளியைப் பாதுகாப்புடன் பத்திரமாக அனுப்புவது என முடிவெடுத்தனர்.
இதன்படி அவர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பில் தற்போது உள்ளார். அவர் தங்கிய குடியிருப்புப் பகுதிகளில் எந்நேரமும் போலீசாரின் கண்காணிப்புப் பகுதியாக மாறிவிட்டதால் தங்கள் குடியிருப்புப் பகுதியின் இயல்பு நிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவித அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வந்துள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் வரலாற்றை இப்படி கூறுகிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் குருசாமி – அதிமுக பிரமுகர் ராஜபாண்டி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட அரசியல் பகை காரணமாக தொடர்ச்சியாக கொலைகள் அரங்கேறின. இவர்களில், ராஜபாண்டி உடல் நலக்குறைவால் உயிரிழக்க, அவரது உறவினரான வெள்ளைக் காளி, ‘குருசாமியைத் தீர்த்து கட்டுவது தனது பொறுப்பு’ என்று சபதம் போட்டதாகவும் கூறப்படுகிறது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் தொடர்ந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட போலீசாரின் தீவிர கடும் நடவடிக்கைகளால் அமைதி திரும்பியது. இந்நிலையில், பெங்களூர் சென்றிருந்த குருசாமியைச் சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பகைத்தீ பற்றிய நிலையில்தான் வெள்ளைக் காளிக்கு 15 நாட்கள் பரோல் கிடைத்து திருச்சியில் தங்கியுள்ளார். தங்கள் குடியிருப்புப் பகுதியில் பிரபல ரவுடி தங்கியதை அறிந்தததிலிருந்தும், எந்நேரமும் சுற்றிச் சுற்றிவரும் போலீசாரையும் கண்டு பீதி அடைந்துள்ளனர்.
இதனைப் புதிதாக காணும் மக்கள், ஏதேனும் விவிஐபி யாரும் இங்கே வந்து தங்கி இருக்கிறார்களா? என்றும் வியந்து போய் விசாரித்தபடியே, அங்கிருந்து நகர்ந்து செல்கின்றனராம். மொத்தம் 15 நாட்கள் பரோலில் 3 நாட்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 12 நாட்களும் போலீசாரின் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்புப் பணியும் அப்பகுதியில் தொடரும் என மாவட்ட போலீசார் கூறுகின்றனர். அது மட்டும் இன்றி இந்த சம்பவத்தால் அங்கு இருக்கும் தெருகளில் உள்ள பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை 24 மணி நேரமும் போலீஸ் முகாம்இட்டு உள்ளதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருச்சியில் இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..