கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 1.5 கிலோ கஞ்சா, 65,000 ரூபாய் பணம் பறிமுதல்..!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், S.K.R பார்க் பகுதிக்கு சென்ற காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவையும் மேலும் அவரிடம் இருந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கவுண்டம்பாளையம் பொங்காளியம்மன் தெருவை சேர்ந்த வினோத்குமார் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே துடியலூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.