1 முதல் 3-ம் வகுப்பு பயில்பவர்களுக்கு ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலா-மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்..!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பொம்மனா–ம்பாளையம் கிராமம்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பொம்மனாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்பித்தால் போதாது.

அவர்களுக்கு வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொள்வதற்காக ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களான யுவராணி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முடிவு செய்தனர். சுற்றுலா என்றவுடன் எங்காவது பூங்கா, சுற்றுலா தலங்கள், கண்காட்சி உள்ளிட்டவற்றிற்கு அழைத்து செல்வதை பார்த்திருப்போம்.

ஆனால் இந்த ஆசிரியர்கள் இருவரும் மாணவர்களை அப்படி அழைத்து செல்லாமல் விவசாயம், புத்தகம் படிப்பது, வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறுவது என செயல்முறை வடிவில் பயிற்சி அளிப்பதற்காக அழைத்து சென்றனர். இதற்காக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இதற்கு கிராம கல்வி சுற்றுலா என பெயரிட்டு மாணவர்களை அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கு அழைத்து சென்றனர்.

முதலில் அந்த பகுதியில் உள்ள நூலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குறித்தும், அதன் நோக்கம் மற்றும் அதனை எழுதியவர்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினர். மேலும் மாணவர்கள் புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களது அறிவாற்றால் பெருகும், புதிய சிந்தனைகள், எண்ணங்கள் தோன்றும். மாணவர்களை அது நல்வழிப்படுத்தும் என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.

தொடர்ந்து அவர்களை பொம்மனாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னென்ன பயிர்கள் பயிரிடப்படுகின்றன. எத்தனை நாளில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பொருளை எப்படி சந்தை படுத்துவது, பொருட்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை இப்படி பல்வேறு விஷயங்களை விவசாயிகள் மாணவர்களுக்கு கூறினர். மாணவர்களும், அவர்கள் கூறியவற்றை ஆர்வமுடன் கேட்டு கொண்டனர். பின்னர் அங்கிருந்து நேராக அந்த பகுதியில் நியாய விலைக்கடையில் மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

ரேஷன் கடையில் உள்ள பொருட்கள், அவை எப்படி கொடுக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் கார்டு என்றால் என்ன?
ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரை எப்படி இணைப்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் அருகே உள்ள மளிகை கடைக்கு அழைத்து சென்று, நியாய விலைக்கடைக்கும், மளிகை கடைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் எடுத்து கூறினர்.
இறுதியாக மாணவர்களை குமாரசாமி நகரில் உள்ள பூங்காவுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவர்கள், விளையாடி மகிழ்ந்து புகைப்படமும் எடுத்து ெகாண்டனர்.
இந்த ஒரு நாள் பயிற்சி என்பது மாணவர்களின் அறிவாற்றலை வளர்ப்பதுடன், அவர்கள் வருங்காலத்தில் என்ன ஆக விரும்புகிறார்களோ, அதனை அவர்களே சுயமாகவே முடிவு எடுத்து கொள்ளவும் உதவும். மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், மூளைத்திறனும் அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.