கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு..!

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவையில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வி, யாக பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மேல தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி புனித நீர் எடுத்துவரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது.

இதனையடுத்து பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஈச்சனாரி விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.