தைப்பூசத்துக்கு மருதமலைக்கு பாதயாத்திரை சென்றவர் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை, பணம் கொள்ளை..!

கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகர், ஹட்கோ காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 62 ) இவரது மனைவி ரஞ்சனா (வயது 46) இவர்கள் 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மகேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு தைப்பூசத்திற்காக மருதமலை கோவிலுக்கு குடும்பத்துடன் பாதயாத்திரை சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் மகேந்திரன் வீட்டின் அருகில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவர் மகேந்திரனுக்கு போன் செய்து வீடு திறந்து உள்ளது என்று கூறினார . இதையடுத்து மருதமலை பாதயாத்திரை சென்ற மகேந்திரன் தனது குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ1 லட்சத்து 50 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மகேந்திரன் மனைவி ரஞ்சனா சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார் .இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பீரோவில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.