வீட்டு பூனையை அடித்து கொன்று வாயில் கவ்வி சென்ற சிறுத்தை..!

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. யானைகள் வீடுகளை அடித்து நொறுக்குவது, பொருட்களை சேதப்படுத்துவது என வாடிக்கையாக செய்து வருகிறது. இந்த நிலையில் சில தினங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் வெகுநேரம் அங்கு சுற்றி திரிந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்தது.

அப்போது அங்கு வளர்க்கப்பட்டு வந்த வளர்ப்பு பூனையை அடித்து கொன்றது. பின்னர் அந்த பூனையை வாயில் கவ்வி கொண்டு சாலையில் சுற்றி திரிந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.காமிராவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்த வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ள வேண்டும். இங்கு சுற்றி திரியும் சிறுத்தையை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.