கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை – இளைஞரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை…

கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை – இளைஞரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி (55). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு கண்டியூர் பகவதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (24) என்பவர் அப்பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளார். அதனையடுத்து அங்கு சென்ற சின்னச்சாமி இரவு வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை அவர் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு உறவினர்கள் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தடய அறிவியல் பிரிவினருக்கும் தகவல் அளித்துள்ளனர். அவர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித் என்ற இளைஞரை பிடித்து சென்று காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,துப்பாக்கி ரஞ்சித் கைவசம் எப்படி வந்தது ? வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கள்ளத் துப்பாக்கியா ?  என்பது குறித்தும் காரமடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் நேற்றிரவு ரஞ்சித்துடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளதாகவும், அப்போது அவர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் சின்னச்சாமியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.