பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி தந்தை, மகள் பரிதாப பலி- பள்ளிக்கு அழைத்து சென்றபோது நடந்த விபரீதம்..!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார் (வயது 57). இவரது மகள் கவுரி (17).

கவுரி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல மகளை பள்ளியில் விடுவதற்காக கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றார். அவர்கள் சீர்தார் சந்திப்பு பகுதியில் சென்றனர். அப்போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கோபகுமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் தந்தை, மகள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தந்தை-மகள் உடல்களை மீட்டு கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபரத்தை ஏற்படுத்திய பீகாரை சேர்ந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.