குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹாயாக அமர்ந்திருந்த கரடி..!!

குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நடமாடி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையின் இருப்புறமும் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு தற்போது இயற்கையாக விளையும் சோலைப் பழமான நவாப்பழ சீசன் தொடங்கியுள்ளது.
இந்த பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன. மரப்பாலம் அருகே குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையும் ரெயில் பாதையும் சந்திக்கும் இடத்தில் கரடி ஒன்று ரெயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்திருந்தது. இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.