2 1/2 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசி கொலை: பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை-கோவை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

கோவை பீளமேடு விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் பால் வியாபாரி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 2 1/2 வயதுக்கு குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அந்த குழந்தையை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரகுநாதனை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை செய்தல், குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக போக்சோ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட ரகுநாதனுக்கு குழந்தை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரிவுக்காக 5 ஆண்டு சிறை  தண்டனையும் , ரூபாய் பத்தாயிரம் அபராதமும் அபராதம் தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும் விதித்ததுடன் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூபாய் 5 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ரகுநாதனை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.