கோவையில் 6 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது..!

கோவை: திருச்சியை சேர்ந்த 30 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 6 வயது மகள், 3 வயது மகனுடன் கோவை வந்தார் . அவர் புலியகுளத்தில் உள்ள பன்றி பண்ணையில் தங்கி இருந்து வேலை செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை நேற்று முன்தினம் திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை . இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். இதில் சிறுமியை அதே பன்றி பண்ணையில் வேலை பார்த்து தேனியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த ஊருக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது .இதையடுத்து போலீசார் தேனிக்கு சென்று சிறுவனை கைது செய்து சிறுமியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர் .இதையடுத்து அந்த சிறுவன் மீது கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த சிறுவன் கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் சிக்னல் அருகே உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.