15 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது- வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு உறவினரான கூலித் தொழிலாளி டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் சிறுமியை அழைத்து சென்று பெற்றோருக்கு தெரியாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் சிறுமியை அவர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு கடந்த 3-ந் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சதீஷ்குமார் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் டாக்டர்கள் குழந்தையையும், தாயையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்களுக்கு சிறுமியின் வயது மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் விசாரித்த போது 15 வயதில் அவர் குழந்தை பெற்றது தெரியவந்தது. இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 15 வயது சிறுமியை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுக்க வைத்த சதீஷ் குமார் அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.