வறுத்து எடுக்கும் வெயிலுக்கு நடுவே 3 நாட்களுக்கு குளு குளு மழை

மிழகத்தில் தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.

நெல்லை ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 14 மிமீ பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.

அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்தும் புதுவை மற்றும் காரைக்காலில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

நேற்றைய தினம் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதமடித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக சமவெளி பகுதியான அரியலூரில் 24 டிகிரியும், மலைப் பகுதியாக ஊட்டி பகுதியில் 12.5 டிகிரியும் வெப்பம் பதிவானது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் லேட்டஸ்ட் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

ஏப்ரல் 28 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஏப்ரல் 30 அன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மே 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். இன்று முதல் மே 1 தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக படிப்படியாக உயரக்கூடும் (Heat Wave Alert). ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.மேலும், இன்று முதல் மே 1 தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படாலம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை ஏப்ரல் 27 மற்றும் ஏப்ரல் 28 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம்.

இன்று முதல் மே 1 வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. எனவே, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு செல்லலாம்.