நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் பெரும் விவாதத்தை கிஏற்படுத்தியுள்ளது .இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் .
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கு திமுக தரப்பிலிருந்து அழுத்தம் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ரஜினிகாந்த் தானும் மறைமுகமாக பதிலளித்தது கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில், கொளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார். “ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை. அவரை மிகவும் மதிக்கிறோம். என் பேச்சால் அவருக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “நான் கூறிய ‘மிரட்டல்’ என்ற வார்த்தை நேரடியாக ஒருவரை அழைத்து மிரட்டியது அல்ல. ஒருவரைப் பற்றி கீழ்த்தரமான, தனிப்பட்ட அவதூறுகளை பரப்புவது தான் அந்த அர்த்தத்தில் கூறப்பட்டது” என்றும் அவர் விளக்கமளித்தார். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த காலத்தில் நடத்தப்பட்ட சர்வேயில், அவருக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருந்ததாகவும், அதனால் எதிர்க்கட்சிகளில் பதட்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், திமுகவை எதிர்த்து எழும் சக்திகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலும் நடந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். தனது நோக்கம் ரஜினியை விமர்சிப்பது அல்ல, அரசியல் சூழ்ச்சிகளை வெளிக்கொணர்வதே என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், விஜயின் அரசியல் பயணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 234 தொகுதியிலும் தவெக தனித்து போட்டியிடும் என உறுதியாக கூறினார். துணை முதல்வர் பதவி, தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு அரசியல் வாய்ப்புகள் வந்தபோதிலும், மக்கள் நலனுக்காக அவற்றை ஏற்கவில்லை என்றும் கூறினார். 2026 தேர்தலில் தற்போதைய கூட்டணி கணக்குகள் முறியடிக்கப்படும் என்றும், தவெக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரையுலகத்தை இணைக்கும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பிரபலங்களை குறித்து பேசும் போது அரசியல் தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. மேலும், இந்த சர்ச்சை அரசியல் பேச்சுகள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் ஒரு கருத்து வேகமாக பரவி, பெரிய விவாதமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பொது மேடைகளில் பேசும் அனைவரும் பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.







