தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மே 10-ஆம் தேதியுடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம் முடிவுக்கு வருவதால், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முறைகேடுகளை தவிர்க்கவும் நாடு முழுவதும் 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 233 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 497 சிறப்பு அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் வன்முறைகள் குறைவு என்பதால், வழக்கம்போல ஒரே கட்டமாகவே வாக்குப்பதிவு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 6-ஆம் தேதியே தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மே மாதத்தில் தேர்தலை நடத்தலாமா என்று ஆணையம் ஆலோசித்து வருகிறது. தமிழக தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்த்தால், 2001, 2006 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மே மாதமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. எனவே, 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ள ஆணையம், இறுதிப் பட்டியலில் தமிழகத்தை வைத்து மே மாதத்தில் தேர்தலை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எனவே, இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன.







