திருப்பதி: திருமலையில் தரிசன வரிசையை தவிர தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளில் பக்தா்கள் செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சரத் பாபு, மௌனிகா தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தனா். எஸ் வி அருங்காட்சியகம் அருகிலுள்ள ஆா் பி மைய வாகன நிறுத்துமிடத்தை அடைந்ததும், மௌனிகா தனது கால்களில் மஞ்சள் தடவுவதற்காக அருகிலுள்ள இருண்ட பகுதிக்குள் நுழைந்தாா். இந்த நேரத்தில், அவரது காலில் ஏதோ கடித்தது போன்று இருந்ததாம். அவரது கணவா் சரத் பாபு அங்கு சென்றபோது பாம்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக இது குறித்து பாதுகாப்புப் பணியாளா்களிடம் தெரிவித்தனா். பாதுகாப்புப் படையினா் உடனடியாக பக்தரை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மெளனிகாவுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, பாம்பு கடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். அங்கு மருத்துவா்கள் மீண்டும் மெளனிகாவை பரிசோதித்து, எவ்வித பிரச்னையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினா். விசாரணையின் போது பாம்பு விஷமற்றது என்பதும் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட பக்தா்கள் தேவஸ்தான ஊழியா்களின் ஆதரவு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்தனா். பின்னா், தம்பதி பாதுகாப்பாக ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் தேவஸ்தானத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழிகள் மற்றும் பகுதிகள் வழியாக மட்டுமே வரிசைகளில் நுழையவும், தங்கள் சொந்த பாதுகாப்புக்காக திருமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள தடைசெய்யப்பட்ட வனப்பகுதிகளில் நடமாடுவதைத் தவிா்க்கவும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.









