கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண் .இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கில் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் .அதில் அந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியைச் சேர்ந்த விஷ்ணு ( வயது 29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட வாலிபர் கைது..!
