கோவை குளங்களுக்கு 9,500 பறவைகள் வருகை..!

கோவை: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கும்.

நீர் பறவைகள் மற்றும் நில பறவைகள் என 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பானது நடைபெற்று வருகிறது. நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளிலும், நில பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4,5-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது.
இதில் முதலில் கடந்த 28 மற்றும் 29-ந் தேதிகளில் நீர்பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

கோவை மாவட்டத்தில் வாளையார், செம்மேடு உக்குளம், பேரூர், உக்கடம், குறிச்சி, செங்குளம், கிருஷ்ணாம்பதி, வெள்ளலூர், சிங்காநல்லூர், பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், ஆச்சான்குளம், சூலூர், பெத்திக்குட்டை, செல்வம்பதி, நரசம்பதி, இருகூர்குளம், வேடப்பட்டி, காளப்பட்டி என 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது. இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் என 5 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பில் சராசரியாக 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவையில் உள்ள குளங்களுக்கு மொத்தமாக 9,500 பறவைகள் வந்துள்ளன. இதனை கணக்கெடுப்பு குழுவினர் பார்வையிட்டு கணக்கெடுத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கிளி, கழுகு, வாத்து, ஹார்ன்பில், பஞ்சுருட்டான், காமன் டெர்ன், மீன்கொத்தி, நாரை வகைகள், தூக்கணாங்குருவி என பல வகையான பறவைகள் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அரிய வகை பறவை இனங்களில் வாளையார் பகுதியில் கிரே ஹார்ன்பில் எனப்படும் சாம்பல் நிற இருவாச்சியும், பெத்திக்குட்டையில் ஆஸ்ப்ரே கழுகு வகையும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.